சரி. சென்ற பதிவில் பார்த்த பங்கு 7-8 மடங்கு உயர்ந்ததாக நினைத்து நாம் இந்த பங்கில் பணம் போட்ட சாமார்த்தியத்தை நினைத்து நம்மையே மெச்சிக் கொண்டோம்.
அதே படத்தை இன்னொரு முறை பாருங்கள்.
நீங்கள் நவம்பர் 2009த்தில் வாங்கியிருந்தால் சுமார் 80 ரூபாயக்கு வாங்கியிருப்பீர்கள். ஆனால் பிப்ரவரி 2013ல் அது 40 ரூபாய்க்கு விழுந்து விட்டது.
அடப்பாவி நன்றாக ஏறிக் கொண்டிருந்த பங்காயிற்றே. அட இதென்ன சோதனை என்று நினைப்போம்.
பொறுத்தவர்கள் 173 ரூபாய்க்கு விற்று பூமி ஆண்டுவிட்டார்கள். பொறுமையில்லாதவர்கள் 50 சதவீதம் நட்டத்தில் விற்றுவிட்டு அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்கை ஒரு சக்கரம். மேலே சென்றது கீழே வரவேண்டும். ஏறுவது இறங்கும். இறங்குவது ஏறும்.
ஒரு முறை நீங்கள் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டால் நீங்கள் நிர்ணயத்திருந்த அல்லது எதிர்பார்த்திருந்த லாபம் வரும் வரையில் விற்க வேண்டிய கட்டாய நிலைக்கு வராதீர்கள்.
முன்பு சொன்னது போல தொலைநோக்கு பார்வையுடன் காய்களை நகற்ற வேண்டும்.
அதற்கு பங்கு வர்த்தகத்தின் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வாழ்கையின் ஆதாரமாக தினசரி வாழ்கைக்காக வரும் வருமானமாக கொள்ளக் கூடாது.
மேலும் விபரமாக கூறுகிறேன்.
உங்கள் வாழ்கையின் தேவைகளை Essential, Desirable and Luxury என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்ளுங்கள்.
- இன்றைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது Essential
- இருக்கும் நிலையிலிருந்து சற்ற வசதியாக இருப்பது Desirable
- முற்றிலும் வசதியாக படோடோபமாக வாழ வேண்டுவது Luxury
எடுத்துக் காட்டாக நீங்கள் உங்கள் மனைவி உங்கள் ஒரு மகள் மூவரும் தான் உங்கள் குடும்பம் என்றால் 1-Bed Roomல் வாழ்கை நடத்தலாம். வீட்டில் விருந்தினர் தங்குவது போல் வந்தால் கடினம் தான். ஹாலில் யாராவது படுக்க வேண்டியிருக்கும். அது நாமா அல்லது வந்தவரா என்பதிலும் குழப்பம் வரும்.
2-bed roomல் இருப்பது Desirable. வந்தவர்கள் தங்கலாம். மற்ற நாட்களில் இன்னொரு படுக்கையறை குழந்தையின் அறையாக விளையாட்டு பொருட்களுடன் அலங்கரிக்கலாம்.
3-bed room கிடைத்தால் பலே ஜோராக இருக்கலாம்.
இப்போது நீங்கள் உங்களுடைய முதல் வீட்டையே பங்கு வர்த்தகத்தின் வருமானத்தில் வாங்க நினைப்பது ஆபத்து. உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் வீடு வாங்க வேண்டும் நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் நல்ல நிலையில் இருக்கிறது இன்னும் சிறிது ஏறினால் விற்றுவிட தயாராக இருக்கிறீர்கள் ஆனால் திடீரென்று சந்தை சரிகிறது. உங்கள் கனவுகளை சேர்த்து கொண்டு தான்.
இது உங்களுக்கு பேரிடியாக இருக்கும். இப்போது என்ன செய்வீர்கள் வீட்டிற்கு முன்பணம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கையில் இருக்கும் பங்குகளை விற்று மேலும் கடன் வாங்கி வீட்டுக் கடன் வாங்கி ஏதோ செய்து வீடு வாங்கிவிடுவீர்கள். 15 வருடம் தவணை கட்ட வேண்டும். ஆனால் இந்த வீடு வாங்கும் நிலையை இன்னும் நான்கு வருடங்கள் தள்ளி வைக்க வாய்ப்பிருந்திருந்தால், விழுந்து போன நல்ல பங்குகளை அடிமாட்டு விலையில் நீங்கள் மேலும் வாங்கிக் குவித்திருந்தால் நான்கு வருடதிற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளும் அடிமாட்டு விலைக்கு வாங்கிய பங்குகளும் சேர்ந்து மளமளவென்று ஏறும் போது ஆஹா இப்போது எந்த கடனும் இல்லாமலே வீடு வாங்கி விடலாமே என்ற நிலைக்கு வரும்.
இரண்டு பெரிய கேள்விகள்
- எப்போது வாங்க வேண்டும்?
- எப்போது விற்க வேண்டும்?
மேலும் பேசுவோம்…..
No comments:
Post a Comment